top of page

TIK - 6

Updated: Mar 17

இதயம்-6


காஞ்சிபுரம் மாவட்டத்துள் அடங்கிய சிறுவாக்கம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவள் அம்மு. அங்கே அம்முவின் தாத்தா, அப்பா, சித்தப்பா என அவர்களுடையது ஒரு கூட்டுக் குடும்பம்.


அவளுடைய அத்தையை அதே ஊரில் திருமணம் செய்து கொடுத்திருக்க, அவரும் அருகிலேயே வசித்து வந்தார்.


அம்முவின் சகோதரன் ஒருவன், அவளது சித்தப்பாவின் மகன்கள் இருவர் என மூன்று ஆண் பிள்ளைகளுக்குப்பின் அந்தக் குடும்பத்தின் ஒரே பெண் வாரிசு அம்மு.


இருவரின் எளிமையான குணமும், ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்துப் பின்னணியிலிருந்து வந்திருந்த காரணமும் சேர்ந்துகொள்ள மல்லியும், அம்முவும் சில நாட்களுக்குள்ளாகவே நன்கு நெருக்கமாகிவிட்டனர்.


மல்லியும் ஓரளவிற்கு இயல்பாக அங்கே இருக்கத் தொடங்கினாள். அவள் அம்முவை சார்ந்தே இருக்கப் பழகியிருந்தாள். அம்மு ஏதாவது காரணமாக விடுப்பில் சென்றால் கூட மல்லி தவித்துப்போய் விடுவாள்.


அம்முவின் குடும்பத்திற்குள் ஏதோ பிரச்சினை என்பதனால் மட்டுமே அவளை அந்த விடுதியில் சேர்த்திருந்தனர் என்பதை மட்டும் அவள் மல்லியிடம் ஒருமுறைச் சொல்லியிருந்தாள்.


அவளது ராஜா அண்ணாவிற்கு மட்டும் அதில் விருப்பமில்லை என்றும் அவள் அடிக்கடி சொல்லுவாள். தினமும் அவளுடைய அண்ணன் புராணம் பாடிக்கொண்டிருப்பாள் அம்மு.


ஒவ்வொரு விடுமுறைக்கு அவள் ஊருக்குச் சென்று திரும்பும் பொழுதும் அவளுடைய அண்ணனின் பரிசு ஒன்று அம்முவிற்குக் கட்டாயம் இருக்கும். ஓரிரு முறை அண்ணனிடம் சொல்லி மல்லிக்கும் அதுபோல் பரிசை வாங்கி வந்திருந்தாள் அம்மு.


அவர்கள் எட்டாம் வகுப்பில் நுழையும் வரை எல்லாம் சுமுகமாகவேச் சென்று கொண்டிருந்தது. அதன் பிறகுதான் அவர்கள் பல பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியதாகிப் போனது.


அவர்களது உணவே அவர்களின் முதல் பிரச்சினையாக இருந்தது. அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது இருந்ததுபோல் இல்லாமல், விடுதியில் அவர்களுக்கு அளிக்கும் உணவின் தரம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வந்தது.


சாப்பிட ஏற்றதாக இல்லாமல், சுவையின்றி உணவில் காரம் அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும். ஆனாலும் அதைச் சொல்ல பயந்துகொண்டு, எல்லோருமே ஏதோ சாப்பிட்டு வைப்பார்கள்.


அந்த உணவு ஒவ்வாமையால், ஒருநாள் மல்லி வயிற்றுவலியில் துடித்துக் கொண்டிருந்தாள். அம்மு, அவர்களது வார்டனிடம் சென்று அவளது நிலைமையைச் சொல்ல, அவர்கள் அதைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.


நேரம் ஆக ஆக அவள் வலி அதிகரிக்க, அம்முதான் பிடிவாதம் பிடித்து, அவளுக்கு மருத்துவம் செய்ய வைத்தாள்.


மேலும் அவர்களது விடுதி உணவகத்திலும் சாப்பிடாமல், உணவு நன்றாக இல்லை என அவள் வெளிப்படையாகக் குற்றம்சாட்டிப் போராடவே, அன்றிலிருந்து அந்த விடுதியின் வார்டன் அவளுக்கு எதிரியாகிப் போனார்.


அடுத்தப் பிரச்சினையாக வந்தாள் செல்வி. அங்கே அந்த வருடம் புதிதாகச் சேர்ந்திருந்தாள் அவள். நல்ல நிறமாக, அவர்களுடைய வகுப்பில் படிக்கும் மற்ற பெண்களை விடக் கொஞ்சம் அதிக வளர்ச்சியுடன் இருப்பாள்.


ஏனோ அவளும் அம்முவும் எலியும் பூனையுமாக சண்டையிட்டுக்கொண்டே இருந்தனர்.


மல்லியை வைத்து அம்முவை அடிக்கடி வம்புக்கு இழுப்பாள் அந்தச் செல்வி. வேண்டுமென்றே மல்லியை, “வள்ளி... வள்ளி... மரவள்ளி” எனக் கிண்டல் செய்ய, மல்லிக்கு அது பிடிக்காவிட்டாலும் அவளுடன் எதிர்த்து சண்டைப் போட்டு பிரச்சனையை வளர்க்க விரும்பாமல், பேசாமல் இருந்து விடுவாள். ஆனால் அம்முதான் அவளுடன் சண்டையிட்டு நிற்பாள்.


ஒரு முறை இவர்களது சண்டை, வார்டன் வரைச் சென்றுவிட்டது. அவர் செல்வியை விட்டுவிட்டார், அம்முவை மட்டும் அதிக நேரம் முட்டிபோட வைத்துத் தண்டித்தார், அவள்மேல் இருந்த காழ்ப்புணர்ச்சியால்.


அன்றிரவு முட்டியெல்லாம் கன்றிப்போய் வலியோடு படுத்திருந்த அம்முவுக்கு மருந்து போட்டுக்கொண்டே “ஏன் அம்மு, எனக்காக அவளோட இப்படி சண்டைபோடற? வார்டன்கிட்ட வேற எதிர்த்துப் பேசி வச்சிருக்க. பாரு, உன்னை எப்படி தண்டிச்சு வச்சிருக்காங்க. எனக்காக பார்த்து, நீ போய் இப்படி தேவையில்லாத பிரச்சினைல மாட்டிக்காத அம்மு” என்று வருந்தினாள் மல்லி.


“எங்க தப்பு நடந்தாலும், உன்னை மாதிரி என்னால வேடிக்கை பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது மல்லி. அதுவும் சாப்பாட்டு விஷயத்தில் நீ மட்டுமே பாதிக்கப்படல. இதையெல்லாம் யாராவது ஒருத்தர் சொல்லித்தான் ஆகணும் இல்லையா? அந்தச் செல்விமேல தப்பு இருக்குன்னு தெரிஞ்சும் இந்த வார்டானம்மா எனக்குத் தண்டனை கொடுத்தாங்கன்னா அதுக்கு நான் என்ன செய்ய முடியும்”


”நீயும் உன்னை கொஞ்சம் மாத்திக்கணும், மல்லி. நீ இப்படியே ஓடி ஒளிஞ்சா, கூடவே இருந்து உன்னை எல்லா நேரமும் யார் பார்த்துப்பாங்க. இதே, நான் பையனா இருந்தாலாவது, உன்னையே கல்யாணம் செஞ்சிட்டு, உன்ன பத்திரமா பார்த்துப்பேன்” என்றாள் அம்மு சிரித்துக்கொண்டே.


“மூஞ்சியைப்பாரு, என்ன பேச்சுடீ பேசற கொரங்கே”


“அப்படித்தான்டீ பேசுவேன் பேயே”


“வேணாம்டீ அம்மு, இப்படி நேரடியாக வம்பு சண்டைக்கு போறதால நீ ஏதாவது பிரச்சனைல மாட்டிக்குவியோன்னு எனக்கு பயமாக இருக்கு. கொஞ்சம் பொறுமையா இருக்கப் பழகுடீ, என் செல்லம் இல்ல?”


“சர்தான்டீ செல்லம், எனக்கு ஒண்ணும் ஆகாது நீ கவலையே படாதே” என்றாள் அம்மு.


ஆற்றாமையில் பெருமூச்சு எழ அவளது படுக்கையை நோக்கிச் சென்றாள் மல்லி. அதற்குள் ஏதோ தோன்றியவளாக, “மல்லி ஒரு நிமிஷம்!” என அவளைத் தடுத்தாள் அம்மு.


“என்னடி?” என்றவாறு அவள் மறுபடியும் அம்முவின் அருகில் அமரவும், தனது வலது கையை நீட்டிய அம்மு, “எனக்கு ஒரு சத்தியம் பண்ணிக்கொடு மல்லி!” என்றாள் அழுத்தமாக.


அவளை ஒரு புரியாத பார்வை பார்த்த மல்லி, “ஏய்! என்னடி சத்தியமெல்லாம் கேக்கற. அதெல்லாம் தப்பு. நாம சொல்ற வார்த்தைல உண்மை இருந்தா போதும், இந்தச் சத்தியமெல்லாம் தேவையே இல்ல, வேணாம்டீ” என்று தயங்கினாள்.


“இல்ல! நிஜமாவே நீ என்ன ஃப்ரண்டா நெனைச்சா, நான் சொல்ற ஒருத்தரைத்தான் நீ கல்யாணம் பண்ணிக்குவேன்னு, நீ எனக்கு ப்ராமிஸ் பண்ணு. அதுவும் வரதராஜ பெருமாள் மேல!” என்று நீட்டிய கையை மடக்காமல் தீவிரமாகச் சொன்னாள் அம்மு.


மறுக்க மனமின்றி அவளது கைமேல் தனது கையை வைத்து அழுத்தியவள், “ப்ராமிஸ்டீ! நீ சொல்ற மாதிரியே செய்யறேன் போதுமா!” என்று முடித்தாள் மல்லி, அதன் பின்விளைவுகளைப் பற்றி முழுதும் அறியாமல்! அவளுக்குச் செய்து கொடுத்த சத்தியத்தை தன்னால் காப்பாற்ற முடியாமலேயே போகப்போகிறது என்பதைச் சற்றும் உணராமல்!


***



ஒருநாள் மல்லி ஒரு நோட்டுப் புத்தகத்தை அம்முவிடம் காண்பித்து, “இது என் தாத்தாவோட நோட் புக், அம்மு. என்னோட புக்ஸ் கூட கலந்து தெரியாம எடுத்துட்டு வந்துட்டேன்” என்றவள் அதிலிருந்த சில டிசையன்களை காண்பித்து, “இதெல்லாம் எங்க தாத்தா வரைஞ்சது. எவ்வளவு அழகா இருக்கு பாரேன்! நான் படிச்சு முடிச்சு பெரியவளா ஆனதுக்கு அப்பறம் இதுபோல டிஸைன் செஞ்சு, நிறைய பட்டுப்புடவை நெசவு செய்யப் போறேன். இதை நீ பத்திரமா வெச்சிக்கோ, அம்மு! நான் ஊருக்குப் போகும்போது வாங்கிக்கிறேன்” என்று அதை அம்முவிடம் கொடுத்தாள்.


அந்த செல்வி அவளுடை புத்தகங்களில் கிறுக்குவது, அதைக் கிழிப்பது என செய்துவைப்பாள். அதற்கு பயந்தே மல்லி அப்படிச் செய்தது.


பிறகு, “நான் என் இடத்திற்கு போகிறேன் பை!” எனத் திரும்பியவளை, “ஆனா ஒரு கண்டிஷன்” என்று தடுத்தாள் அம்மு,


மல்லி, “சொல்லுடி” என்றதற்கு, “நீ நெசவு செய்யற முதல் பட்டுப்புடவை எனக்குத்தான், ஓகேவா?” என்றாள்.


“கண்டிப்பா” என்று அவளை அணைத்துக்கொண்டாள் மல்லி.


அதன் பிறகு வந்த நாட்கள் ஓரளவிற்கு சுமுகமாய்ச் செல்ல, அவர்களுடைய பள்ளியின் ஆண்டுவிழா கொண்டாட்டங்களும் அதைத் தொடர்ந்த அரையாண்டுத் தேர்வு விடுமுறையும் வந்தது.


அப்பொழுது எடுக்கப்பட்ட அவர்களுடைய க்ரூப் போட்டோவைப் பெற்றுக்கொண்டு, எல்லா மாணவிகளும் அவரவர் ஊருக்குச் சென்றனர்.


மல்லி அந்த நோட்டுப் புத்தகத்தை அம்முவிடமிருந்து வாங்க மறந்துவிட்டு ஊருக்குப் போய்விட்டாள்.


ஊருக்குச் சென்ற பின் அவளது தாத்தா உடல்நலக்குறைவால் இறந்துவிட, அவரது காரியங்கள் முடிந்து அவள் ஒரு வாரம் தாமதமாகவே பள்ளிக்குத் திரும்பினாள்.


அவள் அங்கே வந்தபோது அம்மு அங்கே இல்லை. அதேபோல் செல்வியும் அங்கே இல்லை. அவர்கள் இருவருமே பள்ளியிலிருந்து விலகிவிட்டதாகச் சொன்னார்கள்.


அவளால் விடுதியிலிருந்து அம்முவைத் தொடர்புகொள்ள இயலாமல் போக, மிகவும் துடித்துத்தான் போனாள் மல்லி.


அவளது அந்த நிலைமையையும் சிறிதாக்கிக் காட்டுவதுபோல், சில தினங்களிலேயே ஜெகனின் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவே அவளது ஒன்று விட்டுப் பெரியப்பா முத்துராமன், அவளை அங்கிருந்து அழைத்துச்சென்றார். அதன்பின் அவர்கள் வாழ்க்கையே மாறிப்போனது.


***


மல்லி சொல்லிக்கொண்டிருக்க, அமைதியாக அதைக் கேட்டவாறு வந்த தேவா, “அதுக்கு அப்பறமா நீ அவள கான்டாக்ட் பண்ண டிரை பண்ணவே இல்லையா?” என்று வியந்தான்.


“எனக்கு அவங்க வீட்டு லேன்ட்லைன் நம்பர்தான் தெரியும். லீவ்ல இருக்கும்போதெல்லாம் அதுலதான் அவகிட்ட பேசியிருக்கேன். ஆனா, அதுக்கு அப்பறமா வேற யாரோதான் அந்த நம்பரை யூஸ் பண்ணாங்க. அவங்க அம்முவைத் தெரியாதுன்னு சொல்லிட்டாங்க. அப்பாவோட ஹெல்த் கண்டிஷன் சரியில்லாததால, என்னால நேர்ல போய் அவள பார்க்கவும் முடியாம போயிடுச்சு” என்று முடித்தாள் மல்லி.


“ஆக நீ ஹாஸ்டல்ல இருந்தப்ப அம்மு உனக்கு நிறைய உதவி செஞ்சதுனால அவ உனக்கு ஸ்பெஷல் அப்படித்தான?” என்று கேட்டான் தேவா.


“அது மட்டும் காரணமில்ல, நான் அங்கயிருந்து வந்த பிறகும் கூட, தாழ்வு மனப்பான்மை இல்லாம, இந்தச் சமூகத்தை எதிர்கொள்ள எனக்குத் தைரியம் கொடுத்தது, நான் அவகூட இருந்த அந்த மூணு வருஷங்கள்தான். நான் அறியாமயே அவ பல விஷயங்கள எனக்குள்ள புகுத்தி வெச்சிட்டா.


முதல்ல, யாரைப் பார்த்தும் ஓடி ஒளியாம, அந்த நேரத்துக்குத் தகுந்த பதில் கொடுக்க கொஞ்சமாவது நான் கத்துக்கிட்டதும் அவகிட்டதான்” எனத் தொடர்ந்தாள் மல்லி.


“அந்த ஹாஸ்டல்ல கங்கம்மான்னு ஒரு ஆயாம்மா அங்க தூய்மைப் பணியாளரா இருந்தாங்க.. அவங்களும் அங்கயேதான் தங்கி இருந்தாங்க. அவங்க எப்பவுமே எங்க எல்லாரையும் திட்டிட்டே இருப்பாங்க. யாருக்குமே அவங்கள பிடிக்காது. ஆனா, அம்முவப் பார்த்தா மட்டும் அவங்க சிரிச்சுப் பேசுவாங்க. ஏன்னா, அவங்ககிட்ட கூட அம்மு அன்பாதான் பழகுவா.


ஒரு தடவ அவங்க குளிர்ல அவதிபடுறத பார்த்துட்டு, அவ அப்பா வரும்பொது, அவரிகிட்ட சொல்லி ஒரு போர்வை வாங்கிக் கொடுத்தா.


மத்த பொண்ணுங்கலாம், ‘இந்த ஆயா தான் எல்லாரையும் திட்டிட்டே இருக்குதே, நீ ஏன் அம்மு அவங்களுக்கு இதெல்லாம் செய்யற?’ன்னு கேட்டாங்க. ‘அவங்க திட்டினாலும், யாருக்கும் எந்த கெடுதலும் செய்ய மாட்டங்க. அவங்க வயசானவங்க, அதனால நம்மால முடிஞ்ச உதவிய நாம செய்யறதுல தப்பில்ல’ன்னு தெளிவா சொல்லிட்டா.


இது மாதிரி அவளோட நல்ல குணங்கள என்னால மறக்கவே முடியாது. நல்ல வசதியான குடும்பம் அவளுது. அவளோட அப்பா, அம்மா, பர்டிகுலரா அவளோட ராஜா அண்ணா எல்லாரும் அவள ரொம்ப நல்லா பார்த்துப்பாங்கதான். அதுல சந்தேகமே இல்ல.


அவளுக்கு டாக்டரா ஆகணும்னு ரொம்ப ஆசை. அதனால இந்த நேரம் அவ, மெடிக்கல் பைனல் படிச்சிட்டு இருந்தாலும் இருக்கலாம்.


இருந்தாலும் கூட, அவ விஷயத்துல ஏதோ சரியில்லைன்னு என் உள் உணர்வு சொல்லிட்டே இருக்கு. அவ நல்லா இருக்கான்னு எனக்குத் தெரிஞ்சா கூட போதும், அதுக்கு மேல எனக்கு வேற எதுவுமே வேணாம்” என முடித்தவளின் கண்களில் நீர் கோர்த்திருந்தது.


அவள் பேசுவதையே உணர்ச்சி துடைத்த முகத்துடன் அமைதியாகக் கேட்டிருந்த தேவா அவள் மனதை திசை திருப்ப எண்ணி, “அப்படியா? அப்ப அவகிட்ட கொடுத்த உன்னோட தாத்தாவோட அந்த நோட் புக் உனக்கு வேண்டாமா?” என்று கேட்டான்.


“வேண்டாம்”


“வேண்டாமா? அப்பறம் நீ எப்படி அந்த டிசைன்ஸ் வெச்சு புடவை நெய்ய முடியும்?”


“அதுல இருக்கற எல்லா டிசைன்ஸும் எனக்கு அப்படியே மனசுல பதிஞ்சிபோயிருக்கு. அது இல்லாம, இன்னும் நிறைய டிசைன்ஸ் கூட செஞ்சு வெச்சிருக்கேன்”,


“ஓஹ, தட்ஸ் குட்! அப்படின்னா, பெஸ்டா ஒரு டிஸைன் சூஸ் பண்ணி, வெட்டிங் ரிசப்ஷன் சாரி ஒண்ணு ரெடி பண்ணு. அதோட கலர், மத்த எல்லாமே நீயே டிசைட் பண்ணி டிஜிடலா எனக்கு அனுப்பு. நம்ம ஆதி டெக்ஸ்டைல்ஸ் தறிலயே அதை நெய்ய ஏற்பாடு செய்யறேன்” என்ற தேவாவை, ஒரு வியந்த பார்வை பார்த்த மல்லி, “நிஜமாவா சொல்றிங்க!” என்று விழி விரித்தாள்.


“உன்கிட்ட உண்மைய மட்டும்தான் சொல்லுவேன் மல்லி!” என்று தீவிரமாகச் சொன்னவன், “உன் ஆசைப் படி நீ டிஸைன் செய்யபோற புடவை தயாராகும்” என்று முடித்தான்.


அதே நேரம் அவர்கள் ஜீஹெச்சை அடைந்திருந்தனர்.


***


அவர்கள் அங்கே வருவது தெரிந்து அவர்களுக்காக வெளியிலேயே காத்திருந்தார் சுகுணா. அவருடன் சென்று, வார்டில் அவரது கணவர் மாணிக்கத்தைப் பார்த்தனர் இருவரும்.


இதய நோயாளிகள் நிறைந்த அந்த இடத்தைப் பார்ப்பதற்கே துயரமாக இருந்தது.


மூச்சுத் திணறல் காரணமாக அங்கே அழைத்துவரப்பட்டிருந்தார் மாணிக்கம். பிறகுதான் அவரது இதயம் மோசமாகச் செயலிழந்து போயிருப்பதைக் கண்டுபிடித்தனர்.


மூன்று மாதத்திற்குள் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தாகவேண்டும் என்ற நிலையில் இருந்தார் அவர். அதுவரையில் மருத்துவம் பார்த்தாகவேண்டிய சூழல் வேறு.


அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் சென்றால்தான் அவர்களுக்கு வாழ்க்கையே.


தேவா மாணிக்கத்துடன் பேசிக்கொண்டிருக்க மல்லியிடம் அனைத்தையும் துயரத்துடன் சொல்லிக்கொண்டிருந்தார் சுகுணா.


இருவரும் விடை பெற்றுக் கிளம்பும் நேரம், சுகுணாவின் கைகளில் கொஞ்சம் பணத்தை திணித்த மல்லி, “இப்போதைக்கு என்னால முடிஞ்சதுக்கா. உங்களுக்கு வேற ஏதாவது உதவி தேவைப்பட்டா, தயங்காம சொல்லுங்க. என்னால முடிஞ்சத கட்டாயம் செய்கிறேன்” என்றாள்.


அவளைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுதேவிட்டார் சுகுணா. அனைத்தையும் பார்த்தும் பார்க்காததுபோல், கவனித்துக்கொண்டுதான் இருந்தான் தேவா.


***


மிகவும் கனத்த மனதுடன் வண்டியில் அவன் அருகில், அமைதியாய் உட்கார்ந்திருந்தவளிடம், “கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு, மல்லி. எல்லாத்துக்கும் உணர்ச்சிவசப்பட்டா நம்மளால தெளிவாக சிந்திக்க முடியாது” என்றான் தேவா.


“ப்சு... கிட்டத்தட்ட ஏழு வருஷத்துக்கு முன்னால இதே நிலைமைலதான் நாங்களும் இருந்தோம், தேவா. கொஞ்சம் சொத்து இருந்ததால, எல்லாத்தையும் வித்து எப்படியோ சமாளிச்சோம். இவங்க கூட கம்பேர் பண்ணும்போது எங்க நெலம எவ்வளவோ பரவாயில்ல. இவங்க ரொம்ப பாவம், தேவா”


துயரத்துடன் வந்தன அவளிள் வார்த்தைகள்.


மணி பத்தைத் தாண்டியிருந்தது. சாப்பிட்டுவிட்டுப் போகலாம் என்றவனிடம் மறுத்துவிட்டாள் மல்லி. வற்புறுத்தி பழச்சாறு மட்டும் வாங்கிக்கொடுத்து அவளது வீடு நோக்கி காரைச் செலுத்தினான் தேவா.


சிறுது நேரம் அமைதியாகச் செல்ல, அவளை திரும்பிப் பார்த்த தேவாவிற்கு புன்னகை அரும்பியது. அப்படியே உறங்கிப்போயிருந்தாள் அவள்.


***


அன்று ஞாயிறு விடுமுறை அவசரம் ஏதுமில்லாததால் நன்றாகத் துயில் கொண்டிருந்தாள் மல்லி. அவளது கைப்பேசி இசைத்து உறக்கத்தைக் கலைத்தது.


“சொல்லுங்கக்கா” என்று சுகுணாவின் அந்த அழைப்பை ஏற்றாள்.


“மல்லி, ஒரு நல்ல சமாச்சாரம்! நம்ம கம்பெனிக்கு ஒரு டிரஸ்ட் வெச்சிருக்காங்களாமே! அதுக்கு லெட்டர் கொடுக்கச்சொல்லி நம்ம மணி சார் போன் செஞ்சிருந்தாரு. வைத்திய செலவெல்லாம் அவங்க பாத்துப்பாங்களாம். எனக்கு சம்பளத்தோட லீவு கொடுக்கறதா வேற சொன்னாரும்மா. எல்லாம் நீ வந்து பார்த்த ராசிதான் கண்ணு, அவரை பிழைக்க வச்சிடலாம்னு எனக்கு இப்ப கொஞ்சம் நம்பிக்கை வந்துடிச்சும்மா” என மூச்சுவிடாமல் சொல்லிக்கொண்டே போனார் சுகுணா. அவரது குரலில் அளப்பரிய நிம்மதி தொனித்தது.


“இதுவும் கூட உன் வேலைதானா தேவா!?” நினைத்தாள் மல்லி மகிழ்ச்சியுடன்!

Recent Posts

See All
TIK-35

இதயம்-35 மல்லியின் அலறலில் அவளை நோக்கி ஓடிய சுமாயா, “மேம் என்னாச்சு” என்றவாறு அவளது கைகளை பிடித்துக்கொள்ள, மல்லியின் உடல் நடுங்கிக்...

 
 
 
TIK-32

இதயம்-32 மல்லி பார்க்கவேண்டும் என்று கேட்ட அந்தக் காணொளி பதிவை ஆதி பத்திரப்படுத்தி வைத்திருக்கவில்லை. அன்று ஒரு முறை அதைப் பார்த்ததுடன்...

 
 
 
TIK-34

இதயம்-34 மேசையின் மீது சாய்ந்துகொண்டு ராஜவேலுவின் மருத்துவ அறிக்கைகள் அடங்கிய கோப்பை ஆராய்ந்தவாறு, “ஆதின்னா… ஐ மீன் உன்னோட ராஜா...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page