top of page

TIK-7

Updated: Mar 24

இதயம்-7


சசிகுமாருடைய அறையில், அவனுக்கு எதிரில் போடப்பட்டிருந்த இருக்கையில் உட்கார்ந்திருந்தான் தேவா.


ஏதோ ஆவணங்களில் கையெழுத்துப் போட்டுக்கொண்டே அவனிடம் அது குறித்த தகவல்களைச் சொல்லிக் கொண்டிருந்தவனின் கைப்பேசி அறிவிப்பு வந்ததற்கான ஓலியை எழுப்பவே அதை எடுத்துப் பார்த்ததப் புன்னகைத்துக் கொண்டான்.


“என்னிடம் சொன்னா நானும் சேர்ந்து சிரிப்பேன் இல்ல?” என்றான் சசி.


“மோஸ்ட் பர்சனல்”


“நிச்சயமா அது 'ஐ லவ் யூ’ கிடையாது. அப்பறம் எதுக்கு ஓவர் பில்டப்”


“லவ் மெசேஜ் இல்லதான், ஆனா என் ஆளுகிட்டயிருந்து வந்திருக்கற ஃபர்ஸ்ட் மெசேஜ். அதுகூட சுகுணாவுக்காகதான்!” என்று சிரித்துக்கொண்டே போனை சசியிடம் காண்பித்தான் தேவா.


வாட்ஸ் ஆப்பில் இருந்து இரண்டு ஸ்மைலியுடன், “தேங்ஸ்” என்று அனுப்பியிருந்தாள் மல்லி.


பதிலுக்கு ஒரு ஸ்மைலியை மட்டும் அனுப்பிவிட்டு, “இத விடு, மல்லி தவிர மத்த ரெண்டுபேரையும் பர்மனென்ட் செய்ஞ்சுடலாம்தான? எனக்குத் தெரிஞ்சவரைக்கும் ரெண்டுபேருமே திறமையானவங்கதான். என்ன, அவங்க ரெண்டுபேரையும் ஒரே இடத்துல போடாம இருந்தா உருப்படியா வேலைய பாப்பாங்க” என்றான்.


“எனக்கும் அதுதான் சரின்னு தோனுது. ஆனால் மல்லிக்குப் பதிலா அந்த இடத்துல ஒருத்தர அப்பாயின்ட் பண்ணியே ஆகணும். மறுபடியும் ட்ரைனிங்னா, முதல்ல இருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்குமே!” என்று சசி கேள்வியாய் நிறுத்தினான்.


தனது மடிக்கணினியைக் குடைந்தபடி, “இல்ல, போனதடவ ஒரு கேண்டிடேட், ஆங்... வாட்ஸ் ஹிஸ் நேம்? ஹான், ஆதித்யா, அவன நேரடியா அப்பாய்ன்ட் பண்ணிடலாம்” என தேவா சொல்லவும், ஒரு நொடி அதிர்ந்த சசிகுமார், “அவன் இங்க ட்ரைனிங்ல இருந்தப்ப டைலரிங் செக்ஷன்ல வேலை செய்யற பொண்ணுகிட்ட மிஸ்பிஹேவ் பண்ணான்னுதான அவன டெர்மினேட் பண்ணோம்?” என்று தயங்கினான்.


“இல்ல! அப்பவே நாம அதை கொஞ்சம் பொறுமையா ஹேண்டில் பண்ணியிருக்கணும். சரியா கவனிக்காம விட்டதால நடந்த தப்பு அது. அத நாமதான் சரி பண்ணனும். நீ மணிகிட்ட சொல்லி அவன ஒருதடவ கான்டாக்ட் பண்ண சொல்லு. அவன் இங்க ஜாயின் பண்றான்னா ஓகே. இல்லன்னா, புதுசா வேற யாரையாவது பார்க்கலாம்” என்று தேவா தீர்மானமாகச் சொன்னபிறகும் தயங்கினான் சசி.


“அவனோட பேர கவனிச்சியா, சசி? அவன் கண்டிப்பா தப்பு செஞ்சிருக்கமாட்டான்” என்று சொல்லி கண்ணடித்தான் தேவா.


“எப்புடி, வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்லமாட்டானே அப்படியா? நீ சொல்றதால செய்யறேன். ஆனா, நீ இதுக்குமேலயும் தள்ளிப்போடாம சீக்கிரம் மல்லிட்ட பேசிடு!” என்று முடித்துக்கொண்டான் சசி.


“நானும் அதைப் பத்திதான் யோசிச்சிட்டு இருக்கேன். சீக்கிரம் ஒரு முடிவு எடுக்கணும்” என்றான் தேவா தீவிரமாக.


***


தேவாவோ அடுத்த நாள் காலையிலேயே மல்லியிடம் பேச வேண்டும் என்று நினைத்திருக்க, இரண்டு மணிநேரம் விடுப்பு கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தாள் மல்லி.


‘வர வர இந்த மல்லி அடிக்கடி இப்படி பர்மிஷன் எடுக்கிறாளே! அதுவும் நாளைக்கு முக்கியமா அவகூட பேசணும்னு நினைச்சிட்டு இருக்கற இந்த நேரத்துல’ என்று அவளை மனதிற்குள் கடிந்துகொண்டே, அவன் அதற்கு அனுமதி அளித்து பதில் அனுப்பினான்.


மறுநாள் சரியாகப் பதினோரு மணிக்கு அலுவலகத்திற்கு வந்த மல்லி, அனுமதி கூடக் கேட்காமல் கதவைத் தள்ளிக்கொண்டு தேவாவின் கேபினுக்குள் தடதடவென நுழைந்தாள்.


அங்கே அவனுக்கு எதிரில் சசியும், மணியும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கவே, ஒரு நொடி அதிர்ந்து நின்றவள், பின்பு, “சாரி” என்று உரைத்துவிட்டு அங்கிருந்து வெளியில் செல்ல எத்தனிக்க, “ஓகே மரகதவல்லி, நீங்க இருங்க” என்று கூறி விட்டு, புன்னகையுடன் தேவாவை நோக்கி, “மத்த டீட்டைல்ஸ் எல்லாம் அப்பறம் பேசிக்கலாம், ஆஆஆ... ஐ மீன் தேவா” என்றான் சசி.


“ஓகே, குமார் சார்” என்றான் தேவா, பற்களை கடித்தவாறே. பிறகு சசிகுமார் வெளியே செல்ல, மணியும் அவனுடனேயே வெளியேறினான்.



யோசனையின்றி மல்லி நடந்துகொண்ட விதத்தில் எரிச்சலுற்று தேவா அவளைப் பார்த்து முறைத்தான். அவள், “சாரி” என்று முனக, இருக்கையை காட்டி உட்காருமாறு சைகை செய்தான்.


இருந்த படபடப்புக்கு அவளும் தளர்ந்து அமர்ந்தாள்.


“பர்மிஷன் கூட கேக்காம, உள்ள வர அளவுக்கு அப்படி என்ன அவசரம்?”


“சாரி, அர்ஜன்ட்டா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?”


அடுத்து எந்தப் பிரச்சினையை இழுத்து வந்திருக்கிறாளோ என மனதிற்குள் கலங்கிய தேவா, “என்ன செய்யணும்?” என்று கேட்டான்.


“அம்மு பத்தி எனக்கு ஒரு க்ளூ கிடைச்சிருக்கு. அதை வெச்சு உங்களால அவள கண்டு பிடிக்க முடியுமா?” என்றாள் மல்லி கெஞ்சலாக.


“என்ன, அம்முவைப் பத்தி க்ளூவா?” என்று வியந்தான் தேவா.


“என் தம்பி தீபனோட ஸ்கூல்ல இருந்து ஹால் டிக்கெட் வாங்க கூப்பிட்டு இருந்தாங்க. பர்மிஷன் போட்டுட்டு அங்கதான் போனேன்” என அன்று நடந்ததை அவனிடம் சொல்லத்தொடங்கினாள் மல்லி.


ஹால் டிக்கெட்டைப் பெற்றுக்கொண்டு திரும்பும் சமயம், தீபனுடைய வகுப்பில் படிக்கும் பெண் ஒருத்தி அவள்மீது மோதிவிட்டு, “அக்கா, சாரி” என்றாள்.


அப்பொழுது, அவள் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை எதார்த்தமாக கவனித்தாள் மல்லி. அதே போன்ற செயினை ஒரு முறை அம்மு அவளிடம் காண்பித்திருக்கிறாள்.


அதில் ஒரு நொடி திடுக்கிட்டு, அந்தப் பெண்ணிடம், “இந்த செயின் ரொம்ப அழகா இருக்கு, எங்க வாங்கினீங்க?” என்று கேட்டாள் மல்லி.


அருகே நின்ற தீபனை வைத்து, மல்லி அவனது சகோதரி என்பது புரிய, “இது கொஞ்சம் பழசுக்கா. அம்மாவோட செயின். அப்பாதான் வாங்கித் தந்தாங்க” என்றாள்.


“என் ஃப்ரெண்ட் அம்முவும் இதே மாதிரி ஒரு செயின் வெச்சிருக்கா” என்றவாறே மல்லி அதில் கோர்க்கப்பட்டிருந்த டாலரை தொட்டுப்பார்த்தாள்.


அதைப் பார்த்துக்கொண்டே அவர்கள் அருகில் வந்த அந்தப் பெண்ணின் தந்தை, “ஏய் வனிதா, நீ உள்ள போய் வந்திருக்கற வேலை என்னவோ அதைப் பாரு. அத விட்டுட்டு இங்க என்ன வெட்டியா பேச்சு வேண்டிக் கிடக்கு?” என்று அதட்டி அவளை அங்கிருந்து அனுப்பிவிட்டு, “என்ன, இப்படித்தான் சின்னப் புள்ளைய மிரட்டுவியா? உனக்கெல்லாம் வேற வேல இல்ல?” என்று மல்லியிடம் சண்டைக்குக் கிளம்பினார்.


“இங்க பாருங்க, உங்க பொண்ண யாரும் மிரட்டல. பப்ளிக் ப்ளேஸ்ல இப்படியா கத்துவீங்க?”என்று பதில் கொடுத்தாள் மல்லி.


“அக்கா இவங்ககூடல்லாம் இப்படி சரிக்குச் சரியா பேசாதக்கா. நீ மொதல்ல இங்க இருந்து கிளம்பு” என்று கிசுகிசுத்தான் தீபன். எந்த இரசாபாசமும் வேண்டாம் என அவளும் அங்கிருந்து வெளியில் வந்தாள்.


தீபன் வகுப்பறை நோக்கிச் சென்றுவிட, அவளைத் தொடர்ந்து வந்த அந்தப் பெண்ணின் தந்தை, “நீ மறுபடியும் வனிதா கூட பேசறத பார்த்தன்னா உன்ன காலி பண்ணிடுவேன்!” என்று மிரட்டிவிட்டு, பதில் பேச அவளுக்கு வாய்ப்பே கொடுக்காமல் இருசக்கர வாகனத்தில் ஏறிப் பறந்தார்.


படபடப்பு அடங்காமல், நடந்தவற்றை தேவாவிடம் சொல்லி முடித்தாள் மல்லி.


“உனக்கு அம்மு பைத்தியம் நல்லாவே முத்திப் போச்சு. தேவையில்லாம போய் இப்படி யார் யார்கிட்டயோ பிரச்சனய வெல கொடுத்து வாங்கிட்டு இருக்க” என்று வெகுவாக அவளைக் கடிந்துகொண்டான் தேவா.


“இல்ல தேவா, நான் சொல்றத நம்புங்க. நிச்சயமா அது அம்முவோட செயினேதான். அவளுக்கு அவளோட ராஜா அண்ணா வாங்கிக் கொடுத்தது. அங்க இருந்து கிளம்பினதுக்கு அப்பறம்தான் எனக்கே இது உறைச்சுது” என்றாள் மல்லி.


“ப்சு... அதே மாதிரி செயின் யார் வேணாலும் வாங்கலாம் மல்லி. நீ ஏன் இப்படி இருக்க?” என்று சலிப்புற்றான்.


“சான்ஸே இல்ல, ஏன்னா, அந்தச் செயின் அவளுக்காக ஆர்டர் கொடுத்து ஸ்பெஷலா செஞ்சது” என்று மல்லி சொல்லவும் அவன் முகம் யோசனையில் சுருங்கியது.


“ப்ளீஸ் தேவா! நான் சொல்றத கேட்டுட்டு நீங்களே முடிவுசெய்ங்க” என்றவள் அந்த தங்கச் சங்கிலியை அம்மு அவளிடம் காண்பித்த அந்த நிகழ்வை அவனிடம் நினைவு கூர்ந்தாள்.


****


அவர்கள் ஏழாம் வகுப்பில் படிக்கும்பொழுது அரை ஆண்டுத் தேர்வு விடுமுறைக்குச் சென்று திரும்பிய சமயம், அம்மு மல்லியிடம் அவர்கள் இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி வாங்கி இருப்பதாகச் சொல்லி அழகிய அனார்கலி உடை ஒன்றைப் பரிசளித்தாள்.


அதில் மகிழ்ச்சி அடைந்த மல்லி, தன்னிடம் இருந்த, புடவைகளில் பதிக்கும் வண்ணக் கற்கள் சிலவற்றை பதில் பரிசாக அம்முவிற்குக் கொடுத்தாள். அவை வெறும் கண்ணாடி கற்கள்தான்.


அடுத்து வந்த முழு ஆண்டுத் தேற்வு விடுமுறைக்குச் சென்று திரும்பிய அன்று அவசரமாக உள்ளே வந்த அம்மு மல்லியிடம் ஒரு செயினைக் காண்பித்தாள். அதில் இதய வடிவில் ஒரு டாலர் கோர்க்கப் பட்டிருந்தது.


“இத, ராஜா அண்ணா எனக்காக ஆர்டர் கொடுத்து செஞ்சாங்க!” என்று சொல்லி அந்த டாலரில் பொறிக்கப் பட்டிருந்த, “அ” என்ற எழுத்தை சுட்டிக் காண்பித்தாள்.


“தமிழின் முதல் எழுத்து, என் பேரோட முதல் எழுத்து” என்று பெருமையாகச் சொல்லிவிட்டு, அந்த டாலரைக் குலுக்க, சலங்கைப் போன்று அதில் சத்தம் வந்தது.


“இந்தச் செயின் அழகா இருக்குடீ, அம்மு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”என்றாள் மல்லி.


“இதுக்குள்ளே என்ன இருக்கு சொல்லு பார்க்கலாம்?!”


“ம்ஹும்... தெரியலியே, அப்படி என்ன இருக்குன்னு நீதான் சொல்லணும்”


“எல்லாம் நீ கொடுத்த பொருள்தான்”


“இந்த குட்டி டாலர்குள்ள வெக்கற மாதிரி நான் என்னடீ கொடுத்தேன்? எனக்கு சுத்தமா நியாபகமே இல்ல”


“நீ என்கிட்டே கொஞ்சம் கலர் ஸ்டோன்ஸ் குடுத்த இல்ல, அதுதான். அத நகைல பதிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அதனாலதான் இந்த பென்டன்ட் உள்ள வெக்க சொல்லி அண்ணாகிட்ட சொன்னேன்”


“சூப்பர்டீ அம்மு, செம்ம ஐடியா” என்று அந்த பென்டன்டை தன் காதருகில் வைத்துக் குலுக்கினாள் மல்லி.


“இந்தாடி, இத இங்க எப்படி பத்திரமா வெச்சுக்க போற?” என்று கேட்டபடி உடனே அவளிடம் அந்தச் செயினைத் திருப்பிக் கொடுத்தாள்.


“இல்லடீ, இத உனக்கு காமிக்கதான் எடுத்திட்டு வந்தேன். அப்பா வெயிடிங் ஹால்ல உட்கார்ந்துட்டு இருகாங்க. இத அவங்ககிட்ட கொடுத்து அனுப்பிடுவேன்” என்று சொல்லி, அங்கிருந்து ஓடிப்போனாள் அம்மு.


மல்லி சொல்லி முடிக்கவும் மௌனமாக அவளையே பார்த்திருந்தான் தேவா.


“அது அம்மு செயினேதான். அதுல டவுட்டே இல்ல. அது அவங்ககிட்ட எப்படி போச்சுன்னு மட்டும் தெரிஞ்சா, அம்மு இருக்கற இடத்த கண்டுபிடிச்சுடலாம், தேவா” என்றாள் மல்லி.


“சரி, நான் முயற்சி செய்யறேன். ஆனா இனிமேல நீ தனியா எங்கயும் போகக் கூடாது, சரியா” என நிபந்தனை விதித்தான் தேவா.


“ஏன்?” என்று கேட்ட மல்லியிடம், “அந்த ஆளு உன்ன மிரட்டினான்னு நீதான சொன்ன?” என அவளை மடக்கினான்.


“ஐயோ, அவர் சும்மா மிரட்டியிருப்பாரு. அந்த அளவுக்கெல்லாம் யாராவது போவாங்களா?” என்றாள் மல்லி வெகுளியாக.


“என் கன்டிஷனுக்கு ஓகேன்னாதான் நான் உனக்கு அம்முவ கண்டுபிடிக்க ஹெல்ப் பண்ணுவேன், இல்லன்னா, நீயாச்சு உன் அம்முவாச்சு, ஆளை விடு” என்றான் கறாராக.


வேறு வழி இல்லாமல், “இல்லல்ல... நீங்க சொல்றபடியே கேக்கறேன்” என்று ஒப்புக்கொண்டாள்,


“தட்ஸ் பெட்டர்”


“ம்க்கும்”


“ரொம்ப சலிச்சுக்காத, அந்தப் பொண்ணோட பேர் என்னன்னு சொன்ன? மொதல்ல அத சொல்லு”


“ம் வனிதா... அப்படிதான் அவளோட அப்பா அவளைக் கூப்பிட்டாரு”


“சரி, இனிமேல நான் பார்த்துக்கறேன், நீ போய் வேலையைப் பாரு. அம்முவத் தேடுற வேலைக்கு நடுவுல, நம்ம வேலையையும் கொஞ்சம் பார்க்கணும் இல்லையா” என்று கிண்டலாகவே முடித்தான் தேவா.


பிறகு அவர்களுடைய வேலை அவர்களை இழுத்துக்கொண்டது.


***


ஆன்லைனில் அறிமுகப் படுத்தவிருக்கும் விடுமுறைக்கால புதிய ஆடைகளுக்கான வேலைகளில் அலுவலகம் முழுவதுமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.


மாலை நெருங்கும் நேரம் மல்லியை அழைத்த தேவா, “எப்ப அந்தப் பட்டுப் புடவை டிஸைனை ரெடி பண்ண போற மல்லி? என்று கேட்டான்.


“ரெடி பண்ணிடுவேன், ஆனா, ஹாலிடே கலெக்ஷன்ஸ் வேலை இருக்கே” என்று அவள் இழுக்கவும், “அதை மத்தவங்க பார்க்கட்டும். நீ இந்தப் புடவை வேலையை மட்டும் பாரு, போதும்” என்றான். சரி என்று அவள் அங்கிருந்து செல்ல எத்தனிக்கவும், “எப்ப ரெடி ஆகும்னு சொல்லிட்டு போ, மல்லி” என்றான் புன்னகையுடன்.


அவனை இரசித்தபடி, “இப்பவே ரெடியாத்தான் இருக்கு, பார்க்கறீங்களா?” என்று ஆவலுடன் கேட்டாள் மல்லி.


“ம்... பார்க்கலாமே” என்றான் தேவா.


சிறிது நேரத்திலேயே, காகிதத்தில் வரையப்பட்ட சில டிஸைன்களுடன் அங்கே வந்தாள் மல்லி. அதை ஒவ்வொன்றாக அவனிடம் காண்பித்துக் கொண்டிருக்கும்போது அவளது கைப்பேசி ஒலித்தது.


தீபன் அழைத்திருந்தான்.


வேலைக்கு நடுவில் இருக்கும்போது எப்படி அழைப்பை எடுப்பது என யோசித்தாள் மல்லி.


“எடுத்துப் பேசு மல்லி, ஏதாவது முக்கியமா இருக்கப்போகுது” என்று தேவாவே சொல்லவும், “சொல்லு தீபா” என்று அழைப்பை ஏற்றாள்.


“அக்கா அன்னைக்கு உங்கிட்ட சண்டைப் போட்டாரில்ல அந்த வனிதாவோட அப்பா, அவர் இறந்து போய்ட்டார்..க்கா! இத உடனே உனக்கு சொல்லணும்னு தோனிச்சு..க்கா. அதனாலதான் கால் பண்ணேன்” என்றான் தீபன் உச்சபட்ச அதிர்ச்சியுடன்.

Recent Posts

See All
TIK-35

இதயம்-35 மல்லியின் அலறலில் அவளை நோக்கி ஓடிய சுமாயா, “மேம் என்னாச்சு” என்றவாறு அவளது கைகளை பிடித்துக்கொள்ள, மல்லியின் உடல் நடுங்கிக்...

 
 
 
TIK-32

இதயம்-32 மல்லி பார்க்கவேண்டும் என்று கேட்ட அந்தக் காணொளி பதிவை ஆதி பத்திரப்படுத்தி வைத்திருக்கவில்லை. அன்று ஒரு முறை அதைப் பார்த்ததுடன்...

 
 
 
TIK-34

இதயம்-34 மேசையின் மீது சாய்ந்துகொண்டு ராஜவேலுவின் மருத்துவ அறிக்கைகள் அடங்கிய கோப்பை ஆராய்ந்தவாறு, “ஆதின்னா… ஐ மீன் உன்னோட ராஜா...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page